

இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசியதற்கு பாஜக நிர்வாகி அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ மகாராஜன், ஒரு கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, ”3 ஆண்டுகளாக பல பணிகள் நடந்திருக்கின்றன, தற்போது சாலை போட்டு பேருந்து விடப் போகிறோம், அதில் நீங்கள் ஓசியில் செல்ல போகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
இந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது:
”பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்.
தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அமைச்சராக இருந்த பொன்முடி, மகளிர் இலவச பேருந்து திட்டத்தை பயன்படுத்தும் பெண்களை விமர்சித்ததற்காக கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.