தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து மனு

News image
Updated On :12 ஜூன் 2025, 4:29 pm

DIN

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகள் மாதிரிகளை அமைக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவிப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கலாம்; ஆனால், பூஜைகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், அறுபடை வீடுகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் இடையீட்டு மனு அளித்துள்ளது.

இதுகுறித்த மனுவில், அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கத் தலைவர் வா. அரங்கநாதன் கூறுகையில், அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே, மூலவருக்கு பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டுவர இயலும். ஆனால், இந்து முன்னணியினர் அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலையே அமைக்க முடியாது. மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கே முரணானது.

அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகம முறைப்படியே பூஜை செய்ய வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். இதனால் இந்து முன்னணி அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலை அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும் ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும்.

மாதிரி அறுபடை வீடுகளில் இருவேளை பூஜை என்பது ஆகமத்துக்கு முரணானது. மாதிரி அறுபடை வீடுகளில் பூஜைகளை அனுமதிப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். ஆன்மிகத்தை அரசியலுக்கும், கடவுளை கட்சிக்கும் பயன்படுத்தக் கூடாது.

மேலும், மாதிரி அறுபடை வீடுகளை அமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடமோ, மதுரை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமோ அனுமதி பெறவில்லை. ஆகையால், முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.