/

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

News image

எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2025, 4:15 pm IST

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூடியுபர் சவுக்கு சங்கர் தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று அவரது வீட்டில் தூய்மைப் பணியாளர்கள் கழுவுநீரை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான, விடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

அதில், சவுக்கு சங்கரின் வீட்டில் அவரது தாய் தனியே இருக்கும்போது தூய்மைப் பணியாளர்கள் உள்ளே புகுந்து தகாத வார்த்தைகளால் சவுக்கு சங்கரை திட்டுவது பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “சவுக்கு சங்கர் வீட்டில் அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன் படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் - கோப்புப்படம்

இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.