'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்டி

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Published on
Updated on
1 min read

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இன்று நான் அடைந்த சந்தோஷம் மிகவும் அதிகம். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தமடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இந்தத் தாக்குதலுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி. இந்தியாவின் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கக் காரணம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் 'செந்தூரம்' அதாவது குங்குமத்தை வைக்க முடிவவில்லை. அதற்காகத் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

போர் ஒத்திகை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச் செல்வேன். நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை' என்று கூறினார்.

பாஜகவில் இருந்து திருமாவளவனுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, 'அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். நான் இதுவரை கூட்டணி குறித்து அவரிடம் பேசவில்லை. மற்றவர்கள் யாரும் பேசினார்களா? எனத் தெரியவில்லை' என்றார்.

'தேச ஒற்றுமை குறித்து தமிழக முதல்வர் பேசியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக, அதிமுக, பாஜக எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும். 2026 தேர்தலில் 'வெற்றிவேல் வீரவேல்' எனும் ஆபரேஷனை ஆரம்பிப்போம்'

விஜய்க்கு சால்வை அணிவிக்கச் சென்றவரை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, யாரும் ஆயுதம் ஏந்தக்கூடாது என்றார்.

ஒய் பிரிவு பாதுகாப்பு நீங்கள் கேட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, 'நான் முதல்வரை பெரிதும் மதிக்கக் கூடியவர். நயினார் நாகேந்திரன்தான் எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்கக் கூடியவர். அதனால் அவருக்கு எதற்கு பாதுகாப்பு என்று முதல்வர் நினைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com