
தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இந்த தண்டனைக்கு பின்னர் பெண்களை சகோதரிகளாகவும் தாய்மார்களாகவும் மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பெண் சார்பில் புகார் வந்தவுடன் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க வாதிட்டுள்ளார்.
தமிழில் இருந்துதான் கன்னடம் உருவானதாக நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்து சரியானது. மதராஸ் மாகாணமாக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாததற்கு முன்பு 18 மொழிகளைக் கற்றுத் தெரிந்த ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதனை ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து மறுத்துள்ளார். திராவிடக் குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனக் கூறியுள்ளார். கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாக கூறியுள்ளார். தான் கூறியதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கமல்ஹாசன் சொன்னது சரியானது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நான்காண்டு ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது. மீண்டும் இந்த ஆட்சியைத் தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுபவர்கள் யார் எனக் கண்டறிந்து முதல்வர் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார். மதரீதியாக செயல்படுவதாகக் கூறுவது தவறு" என்றார்.
இந்த பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.