

பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்துவதை இந்த சமூகம் நிறுத்த வேண்டும் என்று கோவை பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி பதிலளித்தார்.
மேலும், வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது எனவும் எஸ்.ஐ.ஆர். பற்றி பேசினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. கனிமொழி,
"ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக நாம் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில் இந்த விஷயங்களை, அதாவது பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு விரைவிலேயே ஒரு அழுத்தமான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என முழு முயற்சியோடு ஈடுபட வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்கலாம், நடவடிக்கை எடுத்ததற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும்?
நெல்லையில் தோல்வியுற்றால் பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் சொல்லவில்லை. நானும் அவருடன் இருந்தேன். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் சொவ்லது இயல்புதான்.
எஸ்ஐஆர், தேர்தலுக்கு முன்னால் அவசர அவசரமாக கொண்டு வர வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாக நேர்மையாக நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் போதிய அவகாசம் கொடுத்து சரியாக செய்திருக்க முடியும். பிகாரில் எத்தனை பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கிறோம். ராகுல் காந்தியும் இதனை எடுத்துரைத்திருந்தார்.
ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சிதான் இது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.