

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்) செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் 25-ஆம் தேதி வரை 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காகவும் வாக்காளர் உறவினர்கள் கடந்த 2002 மற்றும் 2005 - ஆம் ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை அறிந்து கூறுவதற்காகவும் செவ்வாய்க்கிழமை (நவ. 18) முதல் வரும் 25- ஆம் தேதி வரை 947 வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையங்கள் செயல்படும். கணினி மூலம் வாக்காளர் விவரங்கள் உடனுக்குடன் சரிபார்த்து, படிவத்தில் பூர்த்தி செய்ய உதவி செய்யப்படும்.
இதேபோல, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தினமும் 50 படிவங்களைப் பெற்று வாக்காளர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
அதன்படி, படிவங்கள் பெற்று அதை அலுவலர்களிடம் திருப்பி வழங்கும்போது, கட்சி முகவர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.