

நெல்லை: தமிழகத்தில் பரவலாக தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில், நெல்லையிலும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலைச் சுற்றி தண்ணீர் செல்வதால் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரண்டு கரையோரமும் தண்ணீர் அதிகமாக செல்வதால் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை இறக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 100 அடியை எட்ட உள்ளது. இதேபோல் சேர்வலாறு மற்றும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியும் தாண்டி உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் ஆற்றில் மேலும் தண்ணீர் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபணி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் இயல்பு வாழ்க்கை தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.