தென்காசி பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று(திங்கள்) காலை 11 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்ற பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த விபத்து பற்றி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.
விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தென்காசியில் இடைகால் அருகே 2 பேருந்துகள் மோதி விபத்து! 6 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.