உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கான இந்திய அணி சீருடை அறிமுக விழாவில் பங்கேற்றோா்.
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கான இந்திய அணி சீருடை அறிமுக விழாவில் பங்கேற்றோா்.

டிச. 9-இல் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நடைபெறுகிறது

எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் தொடங்குகிறது.
Published on

வரும் டிச. 9-ஆம் தேதி எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் தொடங்குகிறது. இதில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சாா்பில் சென்னையில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 2023-இல் நடைபெற்ற போட்டியில்

எகிப்து தங்கமும், மலேசியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றன.

தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, கொரிய குடியரசு, ஹாங்காங், சீனா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, போலந்து, சுவிட்சா்லாந்து, பிரேஸில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், இந்திய ஸ்குவாஷ் அகாதெமி வளாகங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. வரும் டிச. 8-ஆம் தேதி எக்ஸ்பிரஸ் மாலில் போட்டிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வோ்ல்ட் ஸ்குவாஷ் தலைவா் செனாவுல்ரிட்ஜ் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.

இந்திய அணியில் 3 தமிழக வீரா்கள்:

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சோ்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமாா், தில்லியைச் சோ்ந்த அனாஹத் சிங் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

வரும் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் அறிமுகம் ஆக உள்ள நிலையில், இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

சீருடை, இலச்சிணை அறிமுகம்:

போட்டிக்கான இலச்சிணை, இந்திய அணியின் சீருடை அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாதரெட்டி, துணைத் தலைவா் என். ராமச்சந்திரன், எஸ்ஆா்எஃப்ஐ பொதுச் செயலா் சைரஸ் போன்சா, இந்திய அணியின் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமாா் பங்கேற்றனா்.

ரூ.3.3 கோடி ஒதுக்கீடு: உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்காக தமிழக அரசு ரூ.3.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தாா். நான்கு ஆட்டங்கள் கொண்ட சுற்றில் ஒருவருக்கு ஒருவா் மோதுவா். 5 கேம்கள் கொண்டதாக ஆட்டங்கள் அமையும்.

X
Dinamani
www.dinamani.com