

டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று(நவ. 27) புயலாக வலுப்பெற்றுள்ளது. தற்போது வட தமிழகம் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் 'டிட்வா' புயல் நகர்ந்து வருகிறது. வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளுக்கு இடையே நவ. 30 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நவ. 29, 30 தேதிகளில் தெற்கு பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம்.
இதுதொடர்பாக நேற்று என்னுடைய தலைமையில் தலைமைச் செயலாளர் தலைமையிலான கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து அனுப்பி வைத்திருக்கிறோம்.
ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருந்து கவனிக்க வேண்டும் என்றும் மின் கம்பி அறுந்த பகுதிகளிலும் கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
சென்னையிலும் அதிக மழையும் என்று சொல்கின்றனர். அனைத்து இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருள்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். மாவட்டத்தில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் இதனை கண்காணித்து வருகின்றனர்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.