
முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மதுபாட்டில் குறித்த கேள்விகளுக்கு பதறுவது ஏன்? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில், அவரைப் பார்ப்பதற்காக திரளான மக்கள் கூடிய கூட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் மின்சாரத்தை நிறுத்தி திமுகவினர் சதி செய்ததாகவும், கரூர் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி திட்டமிட்டு நெரிசலை ஏற்படுத்தி பலரையும் கொன்றுவிட்டதாக தவெகவினரும் எதிர்க்கட்சியினரும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று(அக்.1) காலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜயின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.10க்கு கீழ் வசூலிக்கப்பட்டதாக 7,540 வந்தன. அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார்களின் அடிப்படையில் ரூ.14,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை ஒருவருக்கு செல்கிறது என்றால், அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் சென்றிருக்கும். இனிமேல் பழனிசாமியையும் 10 ரூபாய் பழனிசாமி என்று அழைக்கப்படலாம்” கடுமையாக விமர்சித்திருந்தார்.
அந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? கரூர் நெரிசல் பலி தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்வாரிய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகின்றனர்,
முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், -வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர்,
-இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு... இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க..
எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? "அரசியல் செய்யாதீர்" "அரசியல் செய்யாதீர்" என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே? உங்கள் பதற்றம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.
ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம். அப்புறம், அந்த பத்து ரூபாய்.... இந்தா வர்றோம்...
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம். ஆனால், திமுக ஆட்சியில் நடப்பது என்ன?
தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை "ஓப்பனாகப் பேசுகிறேன்" என்று சொல்லி ஜஸ்டிஃபை செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா?
இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், "பத்து ரூபாய்" என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாலே, "பாலாஜி" என்று மக்களே சொல்லும் அளவிற்கு, உங்கள் பத்து ரூபாய் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது எல்லாம் மவுனம் சாதித்த பாலாஜி, இப்போது 41 உயிர்கள் பலியானதும் இதைப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் அரசின் அலட்சியத்தை, மறைக்க முனையும் மடைமாற்ற அரசியல் தானே இது? ஏற்கனவே "காசு வாங்கினேன்... ஆனா திரும்ப கொடுத்தேன்" ன்னு சொல்லி தான் அமலாக்கத்துறை வந்து, உங்களுக்கு நெஞ்சு வலி எல்லாம் வந்து அழுதீங்களே.... இப்போ திரும்ப அதே டோன்-ல பேசுறீங்களே... இந்த டைம் சிபிஐ வந்தா? Conditions-ah follow பண்ணுவீங்களா?” எனப் பதிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.