
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவத்தில் ஆளும் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்த அடுத்த நாளில் 2,000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. காலி தண்ணீர் பாட்டில் ஒன்றாவது நீங்கள் பார்த்தீர்களா?
விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்சினையே நடந்திருக்காது. கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு தன் கடமையை சரியாக செய்ததுள்ளது. ஆனால், தவெகவினர் தனது கடமையை சரிவர செய்யவில்லை. யார் பாதிக்கப்பட்டாலும் அரசு துணை நிற்கும்.
விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது. என்னை பற்றி விஜய் 16-வது நிமிடத்தில் தான் பேசினார். என் பெயரை விஜய் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர்.
யாராவது விஜய்யின் கவனத்தை ஈர்க்க தொண்டர்கள் செருப்பு வீசி இருக்கலாம். தொண்டர்கள் முதலில் விஜய்யிடம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். 6 மணிக்கு மக்கள் மயங்கி விழுந்த பகுதியில் இருந்து முதல் செருப்பு வீசப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.