
சென்னை: பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய், எப்படி பாஜக பிடியில் இருப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 50-வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், மணிப்பூர் மற்றும் கும்பமேளா போன்ற இடங்களுக்கு பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் செல்லவில்லை? என செந்தில் பாலாஜி பேசியது குறித்த கேள்விக்கு கும்பமேளா சம்பவம் எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். கும்பமேளாவிற்கு 64 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள்.
கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள், சிறிய குழந்தைகள் முதல், பெண்கள் என இறந்து உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை? போலீஸ் தடியடி செய்வதற்கு அவசியம் என்ன? மின்சாரத்தைத் துண்டித்தது யார்? செருப்பை யார் தூக்கி அடித்தது? முதலமைச்சர் வரும்போது மட்டும் ஏன் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள்? இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது நிச்சயமாக தவறு. நானாக ஒன்றும் சொல்லவில்லை நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்.
பாஜக எங்களுடைய எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் எப்படி விஜய் பாஜக கைப்பிடியில் இருக்கிறார் என்று சொல்ல முடியும்? கரூர் விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு என்ன எழுதி கொடுத்து இருக்கிறார்கள் என தெரிந்தபின்னரே தெரியும் என்றார் நயினார் நாகேந்திரன்.
திருவண்ணாமலையில் இரண்டு காவலர்கள் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த கேள்விக்கு, இது இன்று நேற்று நடந்த செயல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து வேலியே பயிரை மேய்வது போல் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று கொண்டுதான் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.