பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்குமரனை நியமித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அவர்களின் ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமகவின் இளைஞரணி தலைவராக, கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நியமித்து ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் தைலாபுரத்தில் நியமனக் கடிதத்தை ராமதாஸுடன் இணைந்து அவரது மூத்த மகள் காந்திமதியும் தமிழ்குமரனுக்கு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் ராமதாஸ் பேசியதாவது:
தமிழ்குமரனுக்கு இளைஞரணி பதவி வழங்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முகுந்தனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், சொந்த சகோதரியின் மகனான முகுந்தன் நியமனத்துக்கும் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். என்னை கொல்ல விரும்பியவருக்கு இளைஞரணியில் அன்புமணி பொறுப்பு வழங்கினார்.
தற்போது உலகத்தின் முன், தமிழ்குமரனுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்குமரன் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.” எனத் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டபோது, இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமிக்கப்பட்டார். ஆனால், மூன்று மாதங்களில் அந்த பதவியில் இருந்து விலகுவதாக தமிழ்குமரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.