
தேஜ கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று நடிகையும், பாஜக துணைத் தலைவருமான குஷ்பு தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் “தாமரை தேசமே” என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகையும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்குப் பிறகு, குஷ்பு தி.நகர் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், நான் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அல்ல. அந்தக் கேள்வியை விஜய்யிடம் கேட்டு பதில் வாங்கிக் கொள்ளுங்கள். கரூர் விபத்துக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என விஜய்க்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
அது முற்றிலும் பொய்யான தகவல். மணிப்பூர் சம்பவத்தையும் கரூர் சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசுவது முற்றிலும் தவறு. மணிப்பூரில் எல்லைப் பிரச்னை இருக்கிறது. அங்கு நடந்ததை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால் கரூரில் நடந்தது தமிழக அரசின் பொறுப்பிலேயே நடந்தது.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் சிபிஐ விசாரணை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மாநில அரசு ஏன் சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் தராமல், மாநில காவல் துறையின் மூலமாகவே விசாரணை நடத்துகிறது? இது மக்களின் மனதில் சந்தேகம் எழுப்பும் விதமாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.