பழங்குடியின பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 26 வாகனங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
பள்ளி செல்வதற்கு வாகன வசதி இல்லாததால் இடைநின்ற பழங்குடியின மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதற்காக இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்வதற்கான வாகனங்களின் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
முதல்கட்டமாக ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, திருச்சி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ரூ. 3.62 கோடி செலவில் 23 வாகனங்கள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியிலிருந்து 3 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பழங்குடியின மக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்காக ரூ. 5.78 கோடி செலவில் 25 அவசரகால ஊர்திகள், ரூ. 4 கோடி செலவில் 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.