
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவரை உடனே விடுவிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த 2017 ஆம் ஆண்டு போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் மாயமானார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர், சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து அந்தச் சிறுமியை எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட தஷ்வந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து அப்போது ஜாமீனில் வந்த தஷ்வந்த், தன் தாய் சரளாவை கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை செய்து விட்டுத் தப்பினார். இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தனிப்படை தஷ்வந்தை மும்பையில் கைது செய்தது.
சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், கடந்த பிப்ரவரி மாதம் தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா மற்றும் எஸ்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு தஷ்வந்த் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்தை விடுதலை செய்ய செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில்தான் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும், விடியோ, கண்காணிப்புக் கேமரா காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை. போதிய ஆதாரங்கள் இல்லாததால், எழுந்த சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு சாதகமாக்கி விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி விக்ரம்நாத் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவத்தில் உச்சநீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.