
கரூர்: கரூர் மாநகர தவெக செயலாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ம்தேதி நடைபெற்ற தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கொலைக்குச் சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு 110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும் அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேத விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஐ ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 28-ம்தேதி கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கட்சியின் மாநகரச் செயலாளர் மாசி பௌன்ராஜ் வீட்டில் தங்கியிருந்தபோது, அவரையும், அவருக்கு உதவிய மாசிபௌன்ராஜையும் கடந்த மாதம் 29-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (அக்.6-ம்தேதி) மாசி பௌன்ராஜ் சார்பில் ஜாமீன் மனு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், இன்னும் விசாரணை எதுவும் முழுமையடையாமல் உள்ள நிலையில், மாசிபௌன்ராஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிக்க: கரூர் பலி: தவெக மேல்முறையீட்டு மனு அக். 10ல் விசாரணை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.