90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

90 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விருதுகள் வழங்கப்படுகின்றன
முனைவர் ந. முருகேச பாண்டியன் - பத்மபூஷன் கே.ஜே. யேசுதாஸ் - பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
முனைவர் ந. முருகேச பாண்டியன் - பத்மபூஷன் கே.ஜே. யேசுதாஸ் - பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை மாலை 04.45 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார்.

சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன. இன்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் விருது (இயல்) விருது, முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களுக்கும் இன்று வழங்கப்படவிருக்கிறது.

பாலசரசுவதி விருது (நாட்டியம்) விருது, பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்படுகிறது.

அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடய விருதுகள், சிறந்த கலை நிறுவன விருது தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழு விருது கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இன்று சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com