
சென்னை: தமிழக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக பொதுச் செயலரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இருமல் மருந்து குடித்து, 25 குழந்தைகள் பலியாகியிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும், தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் உயிரிழப்புகள் நேர்ந்தன. காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து 25 பேரை பலி கொண்டது. இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தோம்.
மருந்து நிறுவனத்தில் நடந்த சோதனையில் முறைகேடு கண்டறியப்பட்டு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டும், 2024 மற்றும் 2025ல் தமிழக அரசு சோதனை செய்யவில்லை. மருந்து உற்பத்தியை கண்காணிக்காததால் இறப்பு நேர்ந்துள்ளது.
சிறுநீரக முறைகேடு புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அமைச்சர் ஏதேதோ சொல்லி மழுப்பி முடித்துவிடுகிறார். உண்மையில் இந்த மருத்துவமனை சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டிருந்த காரணத்தால்தான், தரகர்கள் ஏழைகளை ஏமாற்றி அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், இந்த மருத்துவமனை ஆளுங்கட்சிக்குத் தொடர்பானவரின் மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இன்று உயர் நீதிமன்றமே தலையிட்டு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் விசாரணை நடத்தாத அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.