
சென்னை: தமிழகத்தில் நடக்கும் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற பரிந்துரைகளை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
என்ன காரணமாக இருந்தாலும் கொலை கொலைதான், யாரும் தப்பக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆணவக் கொலை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவ சிந்தனை கொண்ட சுயமரியாதை அன்பை உருவாக்க முன்னெடுப்போம் என்றார்.
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஆணைய பரிந்துரைப்படி தனிச் சட்டம் இயற்றப்படும். ஆணவப் படுகொலையைத் தடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்டவல்லுநர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்படும். காலனி என்ற சொல் நீக்கம் குறித்து அறிவித்தேன், இது சாதாரண சாதனை அல்ல. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம்.
உலகம் அறிவு மயமாகிறது, அது அன்பு மயமாவதைத் தடுக்கிறது என்பதே நம்மை வாட்டுகிறது. எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொள்வதை நாகரீக சமுதாயம் ஏற்காது.
ஆணவப் படுகொலைகளுக்கு சாதி மட்டுமே காரணமல்ல, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. என்ன காரணமாக இருந்தாலும் கொலை கொலைதான், கொலை செய்வோர் யாரும் தப்பக் கூடாது. படுகொலைக்கு எதிரான விழிப்பணர்வு பரப்புரையை மேற்கொள்ள சமூக ஆர்வலர் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.