
தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ``தவெக - அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை எழுப்ப முடியாது’’ என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியானதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தவெக மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் செல்வக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில் அவர் கூறியதாவது, கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். அரசியல் நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தடைசெய்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மற்றும் தவெகவினரின் அலட்சியத்தாலும், முறையான திட்டமிடல் இல்லாததாலும் கரூரில் உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய்யின் பெயரைச் சேர்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும்வகையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக செல்வக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: சாதிப் பெயர்களை நீக்குவதில் இறுதி முடிவு கூடாது - நீதிமன்றம் உத்தரவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.