

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை(சனிக்கிழமை) தமிழ்நாடு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டிற்கான குறுவை பருவ நெல் கொள்முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கி 1,839 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவினை 17% லிருந்து 22% வரை அதிகரிக்க தமிழ்நாடு அரசால் கடந்த 19.10.2025 அன்று ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதனை தொடந்து, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று நிபுணர் அடங்கிய குழுக்களை நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்நிபுணர் குழு நாளை (25.10.2025) முதல் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முதல் குழு 25.10.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், 26.10.2025 அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாவது குழு 25.10.2025 அன்று தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 26.10.2025 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 27.10.2025 அன்று கடலூர் மாவட்டத்திலும் மற்றும் மூன்றாவது குழு 25.10.2025 அன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் 26.10.2025 அன்று மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர் என தெரித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.