பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
வானகிரி மீனவர்கள் சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை தடை செய்யக்கோரி கடலில் இறங்கி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது.
வானகிரி மீனவர்கள் சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை தடை செய்யக்கோரி கடலில் இறங்கி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது.
Published on
Updated on
2 min read

பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி இன்று(செப். 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சுருக்குமடி வலை, ரெட்டைமடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களை கொண்டு மீன் பிடித்தல் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் இழுவை படகு மூலம் கடலில் மீன் பிடிப்பதால் கடலில் மீன்வளம் அழிந்து வருவதாகவும், சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறி, கடந்த பல வருடங்களாக சீர்காழி தாலுகாவிற்கு உள்பட்ட வானகிரி, தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவக்கரை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மேற்கண்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும் இதனால் 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

எனவே, சுருக்குமடி வலைகளை தடை செய்ய வேண்டும் எனக் கூறினர். அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 26 கிராம மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள்  போராட்டம்.
பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் போராட்டம்.

பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பெரிய விசைப்படகுகள், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர் என்ற தகவலை வெளியானது. இதனையடுத்து, சீர்காழி வட்டாச்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கிராம பொறுப்பாளர்கள் புகார் செய்தனர்.

ஆனாலும் வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வானகிரி உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், இன்று(செப். 2) மீனவர்கள் மற்றும் பெண்கள் வானகிரி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள்  போராட்டம்.
பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் போராட்டம்.

அப்போது அவர்கள் கூறுகையில், ”சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சூழலுக்கு விரோதமாக காணப்படும் இரட்டைமடி வலை, சுருக்குமடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அனைத்து கிராமங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இதற்கு ஆதரவு தெரிவித்து சீர்காழி தாலுகாவிற்கு உள்பட்ட 26 மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்” என்றனர்.

இதனை அடுத்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நேரில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Summary

Fishermen protested by going into the sea with a black flag in Wanagiri village near Poompuhar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com