
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை(செப்.24) காலமானார். அவருக்கு வயது 56.
சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் 1969 ஆம் ஆண்டு பிறந்தவரான பீலா வெங்கடேசன், 1997 ஆம் ஆண்டு பேட்ஜ் இந்திய ஆட்சிப்பணி(ஐஏஎஸ்) அதிகாரியாவார்.
இவரது தந்தை வெங்கடேசன் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாயார் ராணி சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் பேரவை உறுப்பினர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியராகவும், மீன்வளத்துறையின் திட்ட இயக்குநராக இருந்த பீலா வெங்கடேசன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராகவும், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில், கொரானா தொற்று தொடர்பான, இவரது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மக்களை கவர்ந்தது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பீலா வெங்கடேசனுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவரது கணவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் பீலா வெங்கடேசன்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.