
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிப்பு குறித்து திமுக அரசு பொய்யுரைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில்,
``தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பாராட்டுவதற்காக தெலங்கானா முதல்வர் தமிழகத்துக்கு வந்துள்ளார். தமிழகத்தில் அவ்வளவு கல்வி வளர்ச்சி அடைந்துள்ளதா?
பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து விட்டது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1.5 லட்சம் ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனால், மன உளைச்சலில் இருக்கும் 1.5 லட்சம் ஆசிரியர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்று சொல்லவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாயிருப்பதாக ஒரு தவறான தகவலை வெளியிட்டு, மக்களை அரசு ஏமாற்றுகிறது.
அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவரால், மூன்றாம் வகுப்புப் பாடத்தை படிக்க இயலவில்லை. நெல்லையில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்டார்கள். அண்மையில் பள்ளிக்கு அரிவாளைக் கொண்டு செல்கின்றனர். அரிவாளைத் தூக்குவதற்காகவா பள்ளிகள் நடத்தப்படுகின்றன?'' என்று விமர்சித்தார்.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகரித்திருப்பதாக கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில், சென்னையில் இன்று விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில்தான், இந்த விழா குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.