
சென்னை மாநகராட்சியால் தெற்க உஸ்மான் சாலையை சிஐடி நகர் முதன்மை சாலையுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலம், செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவிருக்கிறது.
ரூ.164.92 கோடியில் சுமார் 1.2 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், தி.நகர் என்றாலே போக்குவரத்து நெரிசல் என்ற நிலையை மாற்றும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், கட்டுமானப் பணிகளின்போது, பர்கித் சாலை முதல் பழைய மேம்பாலம் வரை கட்டுமானங்களை இடித்து, புதிதாக இணைக்கும் பணிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்க ஆறு மாதங்கள் ஆனதால் பணிகள் முடிவடையவும் தாமதம் ஏற்பட்டது.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் வழியாகச் செல்வோருக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த 2 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க இதுவரை பல மணி நேரம் ஆகியிருக்கும். இந்த மேம்பாலம் வழியாகச் சென்றால் சில மணித் துளிகளில் கடந்துவிடலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மேம்பாலம் இரும்புப் பலகைகளைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதாவது 4,000 டன் இரும்பு இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐஐடி சென்னை நிபுணர்களால், மேம்பாலத்தின் கட்டுமானம் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால், சென்னையில் கட்டப்பட்டிருக்கும் இதுதான், முதல் இரும்புப் பாலமாகும். மற்றொரு இரும்புப் பாலம் தமிழகத்தில் உள்ளது. ஆனால், அது தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டது.
இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கும் சாலையைக் கடக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் சில மணித் துளிகளில் கடந்து விடலாம் என்பதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சாலையோர ஆக்ரமிப்புகளை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தினால், போக்குவரத்து எப்போதும் போல இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.