விஜய் பிரசாரத்தில் 2 வயது குழந்தை பலி: “குழந்தையை அழைத்துச் சென்றது எங்கள் தவறு!” -பெற்றோர்

கரூரில் 2 வயது குழந்தை பலி! இனிமேல் யாரும் குழந்தைகளை கூட்டத்துக்கு அழைத்துச் செல்லாதீர் - பெற்றோர் கதறல்
விஜய் பிரசாரத்தில் 2 வயது குழந்தை பலி: “குழந்தையை அழைத்துச் சென்றது எங்கள் தவறு!” -பெற்றோர்
PTI
Published on
Updated on
1 min read

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரின் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் கடுமையான நெரிசல் உண்டானது. அதில் பலர் மயக்கமடைந்து விழுந்தனர். இந்த துயர சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் சிலரது அடையாளங்கள் தெரிந்துள்ள நிலையில், அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 2 வயது குழந்தை குரு விஷ்ணு உயிரிழந்திருப்பது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அவர்தம் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பவ நாளான சனிக்கிழமை(செப். 27) என்ன நடந்தது என்பதை அந்தக் குழந்தையின் அத்தை செய்தியாளர்களுடன் விவரிக்கும்போது,

“நாங்கள் விஜய்யின் பிரசாரத்துக்கு புறப்பட்டுச் செல்லும்போது விஷ்ணுவும் எங்களுடன் வந்தே தீருவேன் என்று அடம்பிடித்ததால் அவனையும் அழைத்துச் சென்றோம். அப்பகுதிக்கு விஜய் வந்தவுடனே மின் விநியோகத்தை நிறுத்தி விட்டனர். இதனால் விஜய் என்ன பேசினார் என்பது எங்களுகு கேட்கவில்லை.

இதனையடுத்து, அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு மிக அருகே சென்றால் அவர் பேசுவதைக் கேட்கலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்த பலரும் விஜயை வாகனத்தை நோக்கி நகர்ந்தனர். இதனால் நெரிசல் உண்டானது.

இதற்கு விஜய் மீது பழி சுமத்த முடியாது. எங்கள் மீதே தவறு. குழந்தையை அங்கு அழைத்துச் சென்றிருக்கக் கூடாது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

குரு விஷ்ணுவின் இழப்பை தாங்கிக்கொள்ள இயலாத அவரது அப்பா, “மக்கள் யாரும் இனிமேல் தங்கள் குழந்தைகளை கூட்டமான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது.

கரூர் நெரிசலில் குரு விஷ்ணு (2) உள்பட ஹேமலதா (8), சைலேட்சனா (8), சாய் ஜீவா (4), சனுஜ் (13), தாரணிகா (14), பழனியம்மாள் (11), கோகிலா (14), கிரித்திக் (7), கிஷோர் (17) ஆகிய 10 குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்த பெரும்பாலானவர்கள் இளைய பருவத்தினர் என்பதும் வேதனையை அதிகரிக்கச் செய்துள்ளது.

Summary

10 minors, including a two-year-old, are among the victims of the stampede at Vijay's rally in Karur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com