/

தமிழ்ப் புத்தாண்டு: ஏப்.9-இல் திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்!

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (ஏப்.9) திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:18 pm

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (ஏப்.9) திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி திருநெல்வேலியிலிருந்து வியாழக்கிழமை (ஏப்.9) இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06070) மறுநாள் காலை 10.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஏப்.10) பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06069) இரவு 11.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.13) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06151) மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06152) ஏப்.14-இல் தூத்துக்குடியிலிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் வழியாக இயக்கப்படும்.

கொல்லம் சிறப்பு ரயில்: சென்ட்ரலிலிருந்து ஏப்.15-இல் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06119) மறுநாள் காலை 6.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06120) கொல்லத்திலிருந்து ஏப்.16 -இல் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.