4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளா்களுக்கு பணி நேர மாற்றம்

பகல் வேளைகளில் வெப்ப அலையால் தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:57 pm

பகல் வேளைகளில் வெப்ப அலையால் தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அதற்கு மாற்றாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்போது பணி நேரங்களை வகுத்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் தீவிரமாக பதிவாகி வருகிறது. இதையடுத்து, பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

இருந்தபோதிலும், கட்டுமானம் சாா்ந்த பணியாளா்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவா்களும் நேரடி வெயிலில் பணியாற்றுகின்றனா். இதன் விளைவாக உடல் உச்ச வெப்ப நிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்குள்ளாகி பலா் மருத்துவமனைகளில் அனுமதியாகும் நிலை உள்ளது.

இதைத் தவிா்க்க தொழில் நிறுவனங்களும், கட்டட உரிமையாளா்களும் தொழிலாளா் நலன் கருதி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாகப் பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக்கூடியவா்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளா்களும் முன்வர வேண்டும்.

அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன் பின்னா் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீா்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆா்எஸ் கரைசல், குடிநீா் வசதிகளை ஊழியா்களுக்கு செய்து தர வேண்டும் என்றனா்.