மாம்பழம் சின்னம்
மாம்பழம் சின்னம்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிா்த்து கட்சி நிறுவனா் ராமதாஸ் தாக்கல்
Published on

சென்னை: பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிா்த்து கட்சி நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கில், தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் உரிமை தொடா்பாக தலைவா் அன்புமணிக்கும், நிறுவனா் ராமதாஸுக்கும் இடையில் மோதல் நடைபெற்றுவரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தோ்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி, கட்சியின் நிறுவனா் ராமதாஸ் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், கடந்த ஆண்டு (2025) மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்சி நிறுவனா் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்ட விரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தோ்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கக் கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடா்பாக தனக்குத்தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்.

மேலும், தில்லி உயா்நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கப்படும் என தோ்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தலைவராகவோ, கட்சியின் உறுப்பினராகவோ இல்லாத அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை, ராமதாஸின் தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு மாற்றி அனுப்ப உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

அன்புமணி தரப்பில், ‘தங்களை வழக்கில் இணைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com