மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல்... என் மகன் என்ன தீவிரவாதியா? - அஜித்குமாரின் தாய் வேதனை!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை குறித்து அவரது தாய் வேதனை...
ajithkumar's mother press meet on Madapuram temple guard murder case
அஜித்குமார் | அவரது தாய் மாலதி
Updated on
2 min read

தன் மகனை மிகவும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

என் மகன் என்ன தீவிரவாதியா? இவ்வளவு கொடூரமாக அடித்து விசாரணை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி நகை திருட்டுப் புகாா் அளித்தாா். இந்தப் புகாரில் திருப்புவனம் தனிப்படை போலீஸாா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், போலீஸாா் கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தனிப்படைக் காவலா்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே, அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா்கள் 5 பேரும் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில், "அஜித்குமாா் மரணத்துக்கு காவல் துறையினரே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினா் 10 பேருக்கும் தொடா்பு உள்ளது. எனவே, பிணை வழங்கக் கூடாது. நிகிதா அளித்த புகாரிலும் உண்மையில்லை" என்று கூறியது.

உடனே நீதிபதி, "ஒரு குற்றமும் இல்லாத விவகாரத்துக்காக ஒருவரை அடித்தே கொன்றுவிட்டனா். இதற்கு புகாா் அளித்தவரும் காரணம்தானே? யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும். இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல் துறையினருக்கு நீதிமன்றம் பாடம் புகட்டும்" என்று கூறி வழக்கை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில் மடப்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அஜித்குமாரின் தாய் மாலதி,

"என் மகன் திருடன் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவு மகிழ்ச்சியளித்தாலும் என் மகன் இறந்ததைத் தாங்க முடியாத வருத்தம் இருக்கிறது.

கோயிலில் 11 மணிக்கு சம்பவம் நடந்துள்ளது. எனக்கு தெரியப்படுத்தவே இல்லை. 2 மணிக்குத்தான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். என் மகனுக்கு வியர்த்தது எல்லாம் ஒரு காரணம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஏன் என்னிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. மாலை 4.30 மணிக்குதான் எனக்கு தகவல் வந்தது.

யார், யாரோ அடித்ததாகக் கூறுகிறார்கள். என்ன காரணத்திற்காக என் மகனை அடித்தார்கள்? நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கிறார். யார் சொல்லி புகார் கொடுத்தார்? பெரிய இடத்தில் இருந்து வந்த உத்தரவின்படி செய்ததாக அந்த 5 போலீஸ்காரர்கள் சொல்கிறார்கள். அந்த பெரிய இடம் என்பது யார்? எனக்குத் தெரிய வேண்டும்.

என் மகனை அடிப்பதற்கு முன் என்னிடம் முதலில் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வியர்த்தது எல்லாம் காரணமா? நிகிதாவை கைது செய்ய வேண்டும்.

ஒன்றுமே அறியாத ஒரு அப்பாவியை மிளகாய்ப்பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல் இவ்வளவு கொடூரமாக அடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் சட்டத்தில் இடம் இருக்கிறதா? இப்படி கொடுமைப்படுத்த என் மகன் என்ன தீவிரவாதியா? அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியதுதான். ஏன் இவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டும்? மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள், சிறுநீரைக்கூட வலுக்கட்டாயமாக வர வைத்திருக்கிறார்கள். என் மகன் கூனிக் குறுகி இறந்து போயிருப்பான்" என வேதனையுடன் பேசினார்.

Summary

ajithkumar's mother press meet on Madappuram temple guard murder case

ajithkumar's mother press meet on Madapuram temple guard murder case
அஜித்குமார் கொலை வழக்கு: நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை! - சிபிஐ தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com