

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப். 9) கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதால், வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
வழக்கை திரும்பப் பெறுவதற்கான கடிதத்தை படக்குழு சார்பில் வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியம் நீதிமன்றத்தில் வழங்கினார்.
ஜனநாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கி வாரியம் நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதால், நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது. வழக்கை திரும்பப் பெறுவதற்கான கடிதத்தை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.