

விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 9) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடு; மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் உள்ள எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். டாடா நிறுவனம் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.
மற்ற மாநிலங்களைத் தாண்டி உலக நாடுகளோடு நாம் போட்டிபோடுகிறோம். ஏற்கெனவே லீடராக இருக்கும் துறையில் இன்னும் பெரிய சாதனைகளை நாம் செய்ய வேண்டும்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டால் போதாது, அதை உடனே செயல்படுத்த வேண்டும்.
அடிக்கல் நாட்டப்பட்டு 16 மாதத்திலேயே கார் ஆலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு எந்த அளவுக்கு தொழில்செய்ய ஏற்ற மாநிலம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
அரசின் செயல்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படவுள்ளது. விரைவான செயல்பாடு, அனுமதி, ஒப்புதல், வணிக பிரிவு செயல்பாடுகளை மாநாட்டில் காட்டப்போகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.