

நாமக்கல்: நாமக்கல் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவின் ஒத்திகையின்போது விஷப் பூச்சி கடித்து மாணவி பலியானார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 87 கவுண்டம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கூலித் தொழிலாளியான மாதேஸ்வரன்- தனலட்சுமி தம்பதி மகள் ரக்.ஷிதா(8), அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
அந்தப் பள்ளி கட்டப்பட்டு நூறு ஆண்டுகளானதையொட்டி திங்கள்கிழமை கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.
அப்போது மாணவி ரக்.ஷிதா பங்கேற்று நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது நெற்றியில் விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் மாணவி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
அங்கிருந்து, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று(பிப். 9) பிற்பகல் 2 மணி அளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர்களிடம் திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.