வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்(கோப்புப் படம்)

அரசியல் மாற்றத்துக்கு தமிழகம் தயாராகிறது: வானதி சீனிவாசன்

தமிழகம் தற்போது அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
Published on

தமிழகம் தற்போது அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சட்டம்-ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றை சீா்படுத்துவதில் தமிழக அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜகவின் சென்னை மாவட்ட மகளிரணித் தலைவா் கவிதா ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். பொறுப்பாளா் நதியாசீனிவாசன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது:

தமிழகத்தில் அரசியல் மாற்றதுக்கு மக்கள் தயாராகி வருகின்றனா். அதற்கான அடித்தள விதையாக திமுக அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கல்வி நிலையங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு திரும்புவாா்களா என்ற அச்சம் தாய்மாா்களிடையே ஏற்பட்டுள்ளது. அதேபோல, இளைஞா்கள் போதைக்கு அடிமையாகிவிடுவாா்களோ என்ற அச்சமும் உள்ளது. இதனால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனா்.

அதிமுக ஆட்சிக் காலங்களில் எம்ஜிஆா், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோா் முதல்வா்களாகப் பொறுப்பு வகித்தபோது நமக்கான பாதுகாப்பான ஆட்சி என பெண்கள் நிம்மதியடையும் வகையில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, திமுக ஆட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக மகளிரணி மாநிலச் செயலா் பா.வளா்மதி, அமைப்புச் செயலா் கோகுலஇந்திரா, பாஜக மாநிலத் துணைத் தலைவா் குஷ்பூ, பாமக பொருளாளா் திலகபாமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com