

234 தொகுதியிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என நினைத்துப் பணியாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதாவது:
5 ஆண்டில் நிறைவேற்றிய திட்டங்களே 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை வழிநடத்துவற்கான புளூ பிரின்ட்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 100 வாக்காளர்களை 5 முறை அணுக வேண்டும். அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்குகள் கேட்க வேண்டும்.
வரலாற்றில் முதல்முறையாக தொழில்துறையில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த மாநாட்டை நாளை நடத்த உள்ளோம்.
சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்துள்ளோம் என மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மீதமுள்ள கோரிக்கைகளையும் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றுவோம் எனக் கூறுங்கள்.
சென்னையும், வடதமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என திரும்பவும் நாம் நிரூபித்துக் காட்டணும். எப்போதும்போல உங்களிடம் இருந்துதான் வெற்றியை தொடங்கப்போகிறேன். அதனால் இந்த மண்டலத்தில் இருந்து கூட்டத்தை தொடங்குகிறேன்.
கூட்டணிக் கட்சிகளுடன் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றுங்கள். எந்தத் தொகுதி யாருக்கு ஒதுக்கப்பட்டாலும், 234 தொகுதியிலும் இந்த ஸ்டாலின்தான் வேட்பாளர் என நினைத்துப் பணியாற்றுங்கள்.
2021-ல் இருந்ததைவிட தமிழ்நாடு முழுக்க நமக்கான வரவேற்பு கூடியிருக்கிறது. நிச்சயமாக 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.