

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பொதுப்பணித் துறைக்கு ரூ. 1,694 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் குறித்து பேரவையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “பொதுப்பணித் துறை, பல்வேறு அரசுத் துறைகளுக்கான கட்டடங்களை அமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதோடு மட்டுமன்றி, பாரம்பரியக் கட்டடங்களை அவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
சென்னை. கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் உள்ளிட்ட பல்வேறு எழிலார்ந்த கட்டடங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம், கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகளையும் பொதுப்பணித் துறை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 64 புராதன கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை சிறப்புற நிறைவேற்றி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
மேலும், மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகங்கள் ரூ. 643 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பொதுப்பணித் துறைக்கு 1,694 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.