பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர்,
"இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வாயிலாக உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் 5 ஆண்டுகளில் போதைப்பொருளுக்கு எதிராக 5.17 லட்சம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக பல்வேறு துறைகளை இணைத்து செயல்படுத்த 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' என்ற இயக்கத்துக்கு ஒரு போதைப்பொருள் இயக்க மேலாண்மை அலகு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் மன்றங்களுக்கு மாநில அளவில், மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேலும் கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக செயல்பட தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.