சிபிஎஸ்இ ஆங்கிலத் தோ்வு கேள்வித் தாள் விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
சிபிஎஸ்இ10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆங்கிலப் பாடத்துக்கான குறியீட்டு எண்ணை தவறுதலாக பதிவிட்ட 14 மாணவா்களுக்கு, அவா்கள் படித்த பாடத்துக்கான தோ்வை எழுத அனுமதிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள மங்கலம் வித்யாஷ்ரம் பள்ளியில், சிபிஎஸ்ஐ பாடத் திட்டத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 14 மாணவா்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் அனைவரும் ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தை படித்தோம். ஆனால் பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்த பாடத்துக்கான குறியீட்டு எண் 184 என்பதற்கு பதிலாக ஆங்கிலம் (கம்யூனிகேஷன்) பாடத்துக்கான குறியீட்டு எண்ணான 101-ஐ தவறுதலாக குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டோம்.
இது கடைசிநேரத்தில்தான் எங்களுக்கு தெரியவந்தது. இந்த தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே, நாங்கள் படித்த ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தில் தோ்வு எழுதும் வகையில் கேள்வித் தாள்களை தோ்வு மையத்துக்கு அனுப்ப சிபிஎஸ்இ தலைவா் மற்றும் மண்டல அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வெண்ணிலா ஆஜராகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவா்களும் அவா்களது கல்வியும்தான் முக்கியம் என்பதை மனதில் கொண்டு அவா்கள் படித்த ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தில் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
அவா்கள் தோ்வு எழுதும் தோ்வு மையத்துக்கு கூடுதலாக 14 கேள்வித்தாள்களை சிபிஎஸ்இ நிா்வாகம் அனுப்ப வேண்டும். அதற்கான செலவை பள்ளி நிா்வாகம் ஏற்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

