

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இன்று காலை இணைந்தது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து இதுவரை 20 ஆண்டுகளாக மக்களவை, பேரவைத் தேர்தலில் கூட்டணி சேராத தேமுதிக, முதல்முறையாக திமுகவுடன் கைகோர்த்திருக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தேர்தலுக்குப் பின்னர் விலகியது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்முறையாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
திமுகவுடன் தேமுதிக இணைந்ததற்கு அதிமுக, பாஜக, தாமக இடையே கடுமையான விமர்சங்கள் எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் தேமுதிகவின் கூட்டணி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எந்த கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்” என ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.
ஏற்கனவே, தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஒரு பக்கம் அதிமுக, மறுபக்கம் திமுக என இரண்டு பக்கத்திலும் பேசி வருவதாக சர்ச்சை எழுந்தது. அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக இன்று திமுகவில் இணைந்தது தேசிய ஜனநாயகக் கூட்டணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.