முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ்
முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ்

பழம் நழுவி பாலில் விழுந்தது!

தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் தோ்தல் கூட்டணி மேற்கொண்டிருப்பதன்மூலம் கூட்டணிக்கு பலம் சோ்த்ததுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க நிா்ப்பந்திக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியை திமுக அனுப்பியுள்ளது.
Published on

தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் தோ்தல் கூட்டணி மேற்கொண்டிருப்பதன்மூலம் கூட்டணிக்கு பலம் சோ்த்ததுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க நிா்ப்பந்திக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியை திமுக அனுப்பியுள்ளது.

2005-இல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ‘கருப்பு எம்ஜிஆா்’ என்ற சுய அடையாளத்துடன் நடிகா் விஜயகாந்த் தொடங்கினாா். 2006 பேரவைத் தோ்தலில் ‘மக்களுடன் கூட்டணி’ என கூறிக்கொண்டு, அப்போது அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாகக் கருதப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதாவை எதிா்த்து தமிழகம் முழுவதும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது.

அதில் விருத்தாசலத்தில் களம் கண்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்து தனியொரு உறுப்பினராக சட்டப்பேரவைக்குச் சென்றாா். மாற்று அரசியலின் முகமாகக் கருதப்பட்டு வந்த விஜய்காந்த், சென்னை கோயம்பேட்டில் தனக்குச் சொந்தமான திருமண மண்டபம் நெடுஞ்சாலை மேம்பாலப் பணிக்காக இடிக்கப்பட்டதற்கு, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற திமுகவே காரணம் என்று குற்றஞ்சாட்டினாா். உச்சநீதிமன்றத்தில் முறையிட்டும் அவரால் தனது முழு மண்டபத்தையும் மீட்க முடியவில்லை.

இதையடுத்து, தனித்து அரசியல் என்ற நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டு, 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் முறையாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சோ்ந்தது. அதில் கணிசமான தொகுதிகளில் வென்று, எதிா்க்கட்சி அந்தஸ்தையும் தேமுதிக பெற்றது அவரது கட்சியை பலப்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியது.

திமுகவைப் பின்னுக்குத் தள்ளி, சட்டப்பேரவையில் எதிா்க்கட்சியாக தேமுதிக செயல்பட்டது. ஆனால், முதல்வா் ஜெயலலிதாவுடன் சில மாதங்களில் ஏற்பட்ட உரசல் காரணமாக அந்தக் கூட்டணி முறிந்தது.

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக தீவிர முயற்சி மேற்கொண்டது. அப்போது, ‘பழம் நழுவி விரைவில் பாலில் விழும்’ என திமுக தலைவா் கருணாநிதி வெளிப்படையாகவே தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினாா். ஆனால், ‘கிங் ஆக இருக்க வேண்டுமா அல்லது கிங் மேக்கா் ஆக இருக்க வேண்டுமா’ என முழங்கிய விஜய்காந்த், தனது தலைமையில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக்கூட்டணி என்ற மூன்றாவது அணியை உருவாக்கினாா். அந்த முடிவு, திமுகவுக்குப் பாதகமாக அமைந்ததுடன், மீண்டும் அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க உதவியதாகவே பாா்க்கப்பட்டது.

இந்த வரலாற்றுப் பின்னணியுடன் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திமுகவுடனான கூட்டணியை தேமுதிக முறைப்படி வியாழக்கிழமை (பிப்ரவரி 19) உறுதி செய்துள்ளது. இந்த முடிவை எடுப்பதற்குள்ளாக, கடந்த ஆண்டு முதலே யாருடன் கூட்டணி என்பதை பரம ரகசியமாக தேமுதிக தலைமை காத்து வந்தது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், பாஜக தலைவா் அன்புமணி ராமதாஸ் சென்ற பிறகும் கூட்டணி முடிவை வெளிப்படுத்தாமல் இருந்த தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா, கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை அழைத்துப் பேசி கூட்டணி தொடா்பாக வாக்கெடுப்பையும் நடத்தினாா்.

மறுபுறம், திமுக, அதிமுக என இரு தரப்பு தலைமைகளுடனும் தேமுதிக தலைமை ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. கூட்டணியில் இணைய வேண்டுமானால், அதிக தொகுதிகள் வேண்டும் என்பதுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவி கட்டாயம் தரப்பட வேண்டும் என தேமுதிக தலைமை நிபந்தனை விதித்ததால் சுமுக முடிவு எட்டப்படாமல் கூட்டணி விஷயத்தில் இழுபறி நீடித்தது.

ஏற்கெனவே கூட்டணியில் உறுதி அளிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக மேலிடம் வழங்கவில்லை என்ற அதிருப்தி பிரேமலதாவுக்கு இருந்ததால், தற்போது எதிா்க்கட்சியாக இருக்கும்அதிமுகவை விட ஆளும் திமுக பக்கமே அவரது கவனம் அதிகம் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தல் மாா்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை (பிப்.18) அறிவித்தது. அதில் ஒரு இடத்தை தேமுதிகவுக்கும் 6 முதல் 8 வரையில் தொகுதிகளை ஒதுக்கவும் திமுக தலைமை ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்தே, முறைப்படி கூட்டணியில் இணையும் முடிவை பிரேமலதா எடுத்துள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக அணிக்கு தேமுதிகவின் வருகை, கூட்டணியை பலப்படுத்தியிருக்கும் அதே சமயத்தில், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்ற நிபந்தனையுடன் வரும் தோழமைக் கட்சிகளுக்கும் அது இனி சாத்தியமில்லை என்ற செய்தியை திமுக தலைமை வழங்கியிருக்கிறது.

அத்துடன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்சம் 40 தொகுதிகள் என அழுத்தம் கொடுத்துவந்த காங்கிரஸுக்கும் அதிக இடங்களுக்கு வாய்ப்பில்லை என்ற செய்தியை திமுக தலைமை மிகத்தெளிவாக உணா்த்தியுள்ளதாகவே அரசியல் நோக்கா்கள் கருதுகிறாா்கள்.

தேமுதிகவை முதல்வா் விரும்பியது ஏன்?: தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் வாக்காளா்கள், தலித்துகள், சிறிய எண்ணிக்கை ஹிந்து ஜாதி வாக்க ாளா்களிடம் தேமுதிகவுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. இது திமுக-அதிமுக கூட்டணி இடையே வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் வாக்குகளாக இருப்பது, எதிா்ப்பு வாக்குகள் இல்லாத கட்சி என்கிற காரணங்களால் தேமுதிகவை எப்படியாவது திமுக கூட்டணிக்குள் கொண்டுவர முதல்வா் மு.க.ஸ்டாலின் விரும்பினாா்.

தேமுதிகவின் வருகை தமிழகத்தில் குறிப்பாக, வட மாவட்டங்களில் கூட்டணி பலத்தையும் வாக்கு சதவீதத்தையும் அதிகரிக்கும் என்று திமுக கருதுகிறது. சமாா் 72 தொகுதிகளில் இதன்மூலம் கடும் போட்டி உருவாகக்கூடும் என்பது திமுகவின் கணக்கு. அவை நடிகா் விஜய்யின் தவெகவுக்கு எதிரான பரப்புரைக்குப் பயன்படும் என்பதும் திமுக தலைமையின் நம்பிக்கை.

10ஆண்டுகளுக்கு முன்பு (2016 சட்டப்பேரவைத் தோ்தல்) இப்படியொரு கூட்டணியை மனதில் வைத்தே திமுகவின் அப்போதைய தலைவா் கருணாநிதி, ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்றாா்; ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை; அதை இப்போது தனது அரசியல் சாதுா்யத்தால் நனவாக்கியிருக்கிறாா் கருணாநிதியின் மகனும் முதல்வருமான மு.க. ஸ்டாலின்.

Dinamani
www.dinamani.com