

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், ஸ்டாலினுடனான சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யாருடன் கூட்டணி என்ற முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்காமல் இருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மட்டும் பங்கேற்றிருந்தார்.
இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார்.
ஏற்கெனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் சந்திப்பானது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.