நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் மாசித் திருவிழா வெகுவிமர்சையாக 15 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு மாசி பெருந்திருவிழாவையொட்டி இன்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி கோயில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொறித்த கொடி ஏற்றப்பட்டு பின்னர் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (செவ்வாய்கிழமை) அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர்.
அதன் பிறகு அங்கிருந்து பக்தர்கள் தலையில் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகுமரம் ஏறுதல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி திருவிழா வரும் வருகிற மார்ச் மாதம் 10-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் பாலசரவணன், திருக்கோயில் பரம்பரை பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.