

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூா் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நடைமேடை 10 மற்றும் 11-ல் கடந்த 20 ஆம் தேதிமுதல் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு புறநகர் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 6-ல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்டு வந்தன.
இதனால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்குச் சென்று திரும்பும் லட்சக்கணக்கானோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தேர்வு காலத்தில் மாணவர்களும் நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், சிக்னல் கிடைக்காமல் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாகவும் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 49 ரயில் சேவைகளை இன்றுமுதல் குறைப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.