

திமுக கூட்டணியில் பல பிரச்னை, ஒருங்கிணைப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் அவர் பேசுகையில், ஆட்சி முடிவடையும் தருவாயில், அவசர அவசரமாக திட்டங்களை அறிவிப்பதும், திறந்து வைப்பதும் ஏன்?. திமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் அவசர கோலத்தில் விடப்பட்ட டெண்டரை, அதிமுக ஆட்சியில் ரத்து செய்வோம். அதிமுகவை எதிர்க்கும் சக்தி ஆளும் திமுகவுக்கு இல்லை.
எதிர்க்கட்சியாக இருந்தால் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் திமுக, ஆளுங்கட்சியாக இருந்தால் வெண்கொடை பிடிக்கும். திமுகவின் நிலைப்பாடு எப்போதுமே இரட்டை நிலைப்பாடுதான். எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் முகமலர்ச்சியுடன் வரவேற்போம். அதிமுக கூட்டணியில், தோழமைக் கட்சிகளுக்குதான் முக்கியத்துவம். அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசுகிறார்.
திமுக கூட்டணியில் பல பிரச்னை, ஒருங்கிணைப்பு இல்லை. திமுக அரசில் அனைத்துறைகளிலும் கமிஷன், கலக்சன், கரப்சன். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் எனக்கூறி திமுக ஏமாற்றிவிட்டது. மதுபான விற்பனையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்டு, 10 ரூபாய்க்கு மதிப்பு கொடுத்தவரே செந்தில் பாலாஜிதான். மதுபான பாட்டிலுக்கு ரூ.10 மூலம் மட்டும், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.24,500 கோடி முறைகேடு செய்துள்ளனர். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.