

நாட்டு மக்களை ஏமாற்றும் முதல்வர் ஸ்டாலின் தமிழின துரோகி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பல்லாவரத்தில் அதிமுக பிரசாரத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக ஆட்சியில் எல்லா துறைவாரியாகவும் கொள்ளையடிப்பதைத்தான் அமைச்சர்கள் குறிக்கோளாக வைத்துள்ளனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது - வேதனைதான் மிச்சம்.
தேர்தலில் திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால், நான்கில் ஒரு பங்குகூட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 98 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால், அதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட வலியுறுத்தினேன்.
மக்களிடையே பத்திரிகையையும் ஊடகத்தையும் பயன்படுத்தி, ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, இந்த ஆட்சியை ஸ்டாலின் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். பத்திரிகையும் ஊடகமும் உண்மைச் செய்தியை வெளியிட்டால், இந்தத் தேர்தல் வரையில்கூட இந்தக் கட்சி நீடிக்காது.
நாட்டு மக்களை ஏமாற்றுகிற ஸ்டாலின்தான், தமிழின துரோகி. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்கிறது.
இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணமே போதைப் பொருள்கள்தான் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.