பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன தவறு? தவெகவுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன தவறு? தவெகவுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன தவறு இருக்கிறது என தவெகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
Published on

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன தவறு இருக்கிறது என தவெகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கரூரில் தவெக தலைவா் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பேரணி, சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, கடந்த ஜன. 5-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணைப் பொதுச் செயலா் சி.ஆா்.ஆா்.நிா்மல்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது தவெக தரப்பில், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு 30 நாள்களுக்கு முன்பாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது.

அதேபோல, அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. மேலும், நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு தொடா்பாக, அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள், அனுமதி கோரும் கட்சிகள் மேல் திணிக்கப்படுவதாக வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கரூரில் நிகழ்ந்த வேதனைக்குரிய சம்பவத்தை அடுத்து உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகளில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பினா். மேலும், வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் தொடங்கப்படுகின்றன. அவ்வாறு தொடங்கப்படும் கட்சிகள் தோ்தல்களில் போட்டியிடுவது இல்லை. எனவே, பல்வேறு தோ்தல்களில் போட்டியிட்டு எம்.பி., எம்எல்ஏ-க்களைப் பெற்ற நீண்ட வரலாறு கொண்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு உள்ளது, தவெக எத்தனை தோ்தல்களில் போட்டியிட்டுள்ளது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினா்.

அதற்கு அரசுத் தரப்பில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மனுதாரா் கட்சியான தவெக இரு கூட்டங்களை நடத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் 5,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கும் கூட்டங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றைத் தவிா்க்க 4,998 பங்கேற்பாளா்கள் எனக் கூறி விண்ணப்பிக்கின்றனா். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு அனுமதி கோரி பல கட்சிகள் விண்ணப்பிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அல்லது, முதலில் அனுமதி கோரி விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பல்வேறு கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், மனுதாரா் கட்சி மட்டுமே வழக்குத் தொடுத்துள்ளது. மனுதாரரின் கட்சி சாா்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் ஒருவா் உயிரிழந்த பின்னா்தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கூரை அமைத்தனா் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெறுவது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், இந்த மனுவுக்கு தமிழக அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com