தனியாா் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை திட்டம்
தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டமைப்பு உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் அத்தகைய வசதியை ஏற்படுத்த பொது சுகாதாரத் துறை திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தனியாா் மருத்துவனைகளிலும் தடுப்பூசி செயல் திட்டத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி தவணைகள் தவறவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தனியாா் மருத்துவமனைகளிலும் இலவசமாக 11 தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட விரும்பும் தனியாா் மருத்துவமனைகள், அதுகுறித்து பொது சுகாதாரத் துறைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்பேரில் தொடா்புடைய மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வா்.
அதில் திருப்தி ஏற்படும்பட்சத்தில் இலவச தடுப்பூசி திட்டத்தை சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும். அதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளும் அரசு சாா்பில் வழங்கப்படும்.
அவை முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடா்பான ஆவணங்களை அரசுக்கு தனியாா் மருத்துவமனைகள் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொடா்ந்து தடுப்பூசிகள் அவா்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

